Saturday 1 September 2012

ஓர் இரவுப் பயணத்தில்.... வீர வணக்கம்


பயணம் என்னவோ
பேருந்தில் தான்...
ஆனால் முழுக்க முழுக்க
நான் பயணித்தது
உன்னில்தான்....

மூவர் இருக்கையில்
நம்மோடு சேர்ந்து
மற்றுமொரு பயணி...
கோவமாகத்தான் வந்தது
இருவர் மட்டும்
தனிப் பயணம்
என்ற மகிழ்ச்சி
சிதைந்ததால்...

இரவுப் பயணத்தில்
அனைவரும்
உறங்கி விட
உறங்காமல்
உன்னை சுற்றி
ரீங்காரமிட்டுக்
கொண்டே வருகிறது
மனது...

பேருந்து குலுங்குகையில்
தெரியாமல் இல்லை
தெரிந்தே உன் மீது சாய்ந்தேன்
குளிருக்கு இதமாய்...

உணர்வினை அடக்கி
வேக வளைவுகளில்
உன்னை முத்தமிட
முயன்று தோற்றுகொண்டிருந்தேன்...

கள்ளத்தனமாகவும்
வில்லத்தனமாகவும்
சிரித்துக் கொண்டிருக்கிறாய்
என் உணர்வுகள்
புரிந்தும்
ஏதும் செய்ய இயலாததால்....

"
என்னடி "? என்று
நீ கேட்டதும்
"உணர்வுகளைக் கட்டுபடுத்த
எனக்குத் தெரிந்த
ஒரே வழி
அழுகைதான்"
என்றேன்...
தலையில் கொட்டி
பைத்தியம்
என செல்லமாய் திட்டி
அனைத்திட்டாய்..

பதிலிட்டேன்
"முத்தமிடக்கூட
முயலாத உன்னை
முட்டி போடவைத்து
கட்டி அனைத்து கொண்டே இருப்பேன்
நீயும் சேர்ந்து என்னை அணைக்கும் வரை" என்று....


"ஆண்கள் எப்பொழும்
உணர்சிகளை கட்டி ஆளுகிறார்கள்...
பெண்கள் எப்பொழும்
உணர்சிகளுக்குள் அடங்கி போகிறார்கள்...."

எல்லை மீறிக் கொண்டிருக்கும்
என் ஆசை உணர்வுகளுக்கு
முற்றுப் புள்ளி வைத்தேன்
விளக்கணைந்த நேரத்தில்
உன் கன்னத்தில் முத்தமிட்டு...

பயணத்தின் போக்கில்
ஓரிடத்தில்
பேருந்து நின்றது...
அனைவரும் இறங்கிவிட
உன்னை இறங்கவிடாமல் 
உன் மடியில்
உறங்குவது போல்
நடித்து உறங்கி கொண்டிருந்தேன்

என் தூக்கத்தை
கலைக்க விரும்பாதவன்போல்
நீயும் என்னை
எழுப்பாமல் இருந்திடாய் ...

உன் மனதை
முழுவதுமாய்
படித்துப் பட்டம்
பெற்றவள் நான்
எனக்குத் தெரியாதா
உன் சூழ்ச்சிபற்றி...
அப்பொழுது
உன் விரல்கள்
என் முதுகில்
வரைந்த கோலங்களை
உறங்கியபடியே
ரசித்து சிரித்தேன்...

வேகமாய் எழுந்து
உன் காதருகில்
மெதுவாய்
மூச்சுக் காற்றை
வெளியேற்றி விட்டு
இது என்ன இடம்?
என்றுகேட்டேன்

அப்பொழுதுதான்
விழித்தவள் போல்...
ஒரு நிமிடம்
அதிர்ந்து தான் போய்விட்டாய் நீ...
அதையும் ரசித்துக்கொண்டு

மீண்டும் உன் மடியில்
முகம் புதைத்து
உறங்க நடிக்கத்
தொடங்கிவிட்டேன்
மீண்டும் என்
சில்மிசங்களைத் தொடர...

ஜன்னலில் வழி
காற்று புக
குளிர ஆரம்பித்துவிட்டது
மெதுவாய் உன்
கைகளால் என்னை அணைத்திட்டாய்...
அந்த ஸ்பரிஸ
மென்மையில்
சிறிது உறங்கித்தான்
போய்விட்டேன்...

குழந்தையின்
உறக்கம் ரசிப்பவனைப்போல்
என் தலையை கோதிக் கொண்டே
வந்ததில் சற்று பலமாய்
தூக்கம் கட்டி போட்டது என்னை...

இறங்கும் இடம் வந்ததும்
மெதுவாய் எழுப்பி
"
இறங்கனும்டி...
நாம் போக வேண்டிய இடம் வந்துவிட்டது"
என நீ சொன்னதும்
புரியாமல் தூக்கக்
கலக்கத்திலே இருந்தேன்..
கை பிடித்து
பத்திரமாய்
இறக்கிவிட்டாய்
தாயைப் போல்...

தொடர்வண்டியில்
சிறுது தூரம்
செல்ல வேண்டியதால்
பயணசீட்டு
எடுத்துவிட்டு
தொடர்வண்டியில்
ஏறி அமர்ந்தோம்...

சிறிது சிறிதாய்
தூக்கத்தில் இருந்து
விடுபட ஆரம்பித்தேன்..
 விடியற்காலையில்
என்பதால்
அவ்வளவாக கூட்டம் இல்லை
அதுவும் நன்றாய்த்தான்
இருந்தது நீயும்
நானும் சிறிது நேரம்
மனம்விட்டுப் பேச...

பேச்சின் ஊடே
ஏற்பட்ட சண்டையால்
முகத்தை திருப்பிக் கொண்டேன்...

ரயிலின் வேகத்தை பார்த்தும்
வீசிய காற்றின்
வேகத்தினை
ரசித்தும்
இருந்த எனக்கு
எதிர்பாராமல்
முத்தம் ஒன்றை
பரிசளித்தாய்...
இனிமேல் அடிக்கடி
உன்னோடு சண்டை
போடுவது என்று முடிவு
செய்து கொண்டேன்
அந்த கணம் முதல்...

பதினைந்து நிமிட வேகத்தில்
வந்திறங்கினோம் இருப்பிடத்திற்கு...
பிரிந்து செல்ல மனமில்லாமல்
காபி சாப்பிட
அழைத்துச் சென்றேன்
உன்னை...
அதிகாலை குளிருக்கு
இதமாய் இருந்தது
அந்த காபி...

குடித்து முடித்ததும்
உன் முகம் பார்த்து
ஏக்கமாய் சொன்னேன்
"சென்று வருகிறேன்
மீண்டும் சிந்திப்போம்
இந்த இரவுப் பயணம் இனிமையாய்
இருந்தது என்று சொல்லியவண்ணமே..."

திடீரென என் கரம் பிடித்து
கவலைப் படாதே...
விரைவில்
உன் கரம் பிடித்து
என்னை விட்டு விலகாமல்
வைத்துக் கொள்வேன்" என்றாய்...

அவனின் அந்த
அழகிய முகத்தை
ரசித்தப் படியே
நின்றிருந்தேன்
திடீரென்று
ஒரு குரல்....

"எவ்ளோ நேரமா
நீங்க அப்பாவின் புகைப்படத்தைப்
பார்பிங்க அம்மா...
கிளம்புங்க...
திதி கொடுக்க
நேரமாயிடுச்சு" என்ற மகனின் ஆதங்கம்...

ஆம்.. இன்று தான்
நீ என்னை விட்டு
மறைந்த பத்தாம் வருடம்...

வளர்ந்து விட்டனர்
நம் குழந்தைகள்...
உன் ஐம்பத்து இரண்டாம் வயதில்
ராணுவத்தில்
நீ பெற்ற வீர மரணத்தில்
கிடைத்த புகழின் துணையோடு...
 
 அப்பொழுதுதான்  என் நினைவிற்கு வந்தது
 காதலிக்கும் போது நடந்த
ஓர் இரவு பயணத்தின்
நினைவலைகளில் வெகு நேரமாய்
நான் மூழ்கிப் போய் இருந்தது...

எப்பொழுதும்
நாம் காதலர்கள்தான்..
மனதில் உறுதியாய்
உனக்கு மானசீகத்தோடு
தெரிவிக்கிறேன்
வீரவணக்கம்
என் அன்பு காதலா...

4 comments:

  1. யோவ் கவிதை என்னை என்னவோ பண்ணிடிச்சு, உனக்குள்ள இவ்வளவு திறமையா .எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு .ஆனால் கவிதையை படிக்கும் போது கொஞ்சம் பயந்துட்டேன் ,அரியலுருக்கு போகும்போது நடந்தததா இருக்குமோன்னு ஒரு கணம் தடுமாறிட்டேன் ,அந்த அளவுக்கு லைவ்வா இருந்துச்சு ,அது என்னமோ மனசு படபடன்னு ஆயிடுச்சு நீ நல்லாவருவேடா ,என்னால இன்னும் ஜீரணிக்க முடியல சாரிப்பா ,கொஞ்சம் தடுமாறிட்டேன் ,கவிதையோட சூழல் ,நீ நெஜமாவே ஊருக்கு போன சூழல் போட்டு குழப்பிகிட்டேன் ,மனச ரணகளமா ஆக்கிடுச்சு ,நான் சென்சிடிவானவன் ,சாரிப்பா ,நான் மனசார சொல்றேன் ந உனக்கான இடம் காத்திட்டு ருக்கு ,

    ReplyDelete
  2. என்ன சொல்வது என்று தெரிய வில்லை.உணர்வுகளை உச்சி மோர்ந்து இருக்க்ரீர்.கிளாஸ் ரைட்டிங்.....நீங்க என் குரு என்பதை சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்...

    ReplyDelete
  3. வரிகள் பாதிக்கின்றன.

    ReplyDelete
  4. நன்றி உங்கள் கருத்துகளுக்கு...

    ReplyDelete