Thursday 25 April 2013

சிதைக்காமல் உன்னுள் சிறைபட...

மழை கோர்த்த
மேகம் ஓன்று
மௌன நடை
பயின்ற மாலையில்,

காதலிலே
சுளுக்கு எடுக்கும்
கள்ளன் அவன்
கடற்கரையோரம் 
காத்திருக்க,

காலத்தின்
பொறுமைக்கு
கட்டுபட்டவளாய்

மனதுக்குள்
மகிழ்ச்சி
ஊஞ்சலாட
கருநீல சேலையை
ஒழுங்கு செய்தவண்ணம்
முன்னோக்கி
நடந்து வந்தவளை

இமைக்க மறந்த
கண்ணோடு
விழுங்க ஆரம்பித்தான்
காத்திருந்தவன்

அருகில் அவள்
வந்தமர்ந்ததும்

பருவத்தில்
செய்த சண்டித்தனத்தில்
கொட்டிய
பருக்கள் அடங்கிய
முகத்தில்
பொசு பொசுவென்றிருந்த
குறும்பு மறைத்த
மீசையை
முறுக்கி விட்டு

சிகரெட் மறைத்த
உதடுகளில்
பூசிய மென்மையோடும்

குறும்புக் கண்களில்
தவள விட்ட
காதலோடும்

குழந்தைத்தனம்
நிறைந்தவளின்
கொஞ்சும் முகம்
பார்த்து
ரசிக்க தொடங்கினான்...

அவனது விரல்கள்
ஆயாசம் தொடர
அவளின்
கன்னக் கத்துப்புகளை
தொட எத்தனித்தவன்

ஏதும் செய்ய இயலாதவனாய்
அவளின் தோள் பட்டை
தொட்டு

காதுக்கு அருகில்
வசப்பட்டிருந்த
காற்றை
துரத்தி விட்டு

பூசலோடு
ஏங்கிய மனமுமாய்
புன்னகை ஒன்றை
முன் வைத்து

மெலிதான
சப்த்தத்தில்
சொன்னான்

"ஏய்... பாப்பு...
அசையாதே...

என்னுள்
உன்னை
உள்வாங்கி கொண்டிருக்கிறேன்

சிதைக்காமல்
உன்னுள்
சிறைபட

இவ்வுலகத்தோடு
நாமிருவரும்
வசப்பட

என்னை
புதைத்துக்
கொண்டிருக்கும்
இந்த தருணம்
மீண்டும் கிடைக்கும் வரை" என்று 

(Deepa Vennila)

2 comments:

  1. வார்த்தைகளின் கோர்வையில்
    வசனங்களின் வாசனை - கவிதை
    சொல்வதற்கும் ஒரு கலை வேண்டும்,
    அது உங்களிடம் ததும்புவதை
    இன்றே,
    நான் கண்டேன்.

    ReplyDelete