Thursday 18 April 2013

நிறுத்தத்தில் நிற்கும் நிகண்டுகள்....

 

 
 
அரசலும் உரசலுமான பேருந்து பயணத்திற்கு
அவதி அவதியாய் அரைத்த துவையலில்,

கூலிக்கு செல்லும் அம்மாவிற்கு கொஞ்சமும்
தனக்கு வைத்த தயிர் சோறுக்கு கொஞ்சமும்
அள்ளிக்கொண்டு,

லேசாய் செய்த முகப்பூச்சோடு 
மடிப்பான சேலையை எடுத்துவிட்டு கிளம்பினேன்....

நிறுத்தத்தில் நின்ற கூட்டத்தோடு சேர்ந்து
நானும் நசுங்க தயாராக்கினேன் உடலும் மனதும் சேர்ந்து...

 
"வகிடு எடுத்த தலையில்
வழித்து வைத்த எண்ணையோடு
 
பிசிறு நீங்கிய பின்னலில்
கொஞ்சம் சொருகிய பூவோடு
எளிமையான உடையில் தயாரான
கல்லூரி பெண்கள்...

அவர்களை கண்ணும் கருத்துமாய்
காவல் செய்து கடலை போட
தயாராய் இருந்த விடலை பையன்கள்...

தினசரி கூலி பெற
பழைய சோறு வாளி தூக்கிய
குடும்ப பொறுப்பாளர்கள்...

வீட்டுபாரம் சுமக்க படிப்பை துறந்து
சிறு கடைகளுக்கு எடுபிடியாய்
அடிமைப்பட்ட, ஏக்கம் நிறைந்த
விழிகளைக் கொண்ட
'சிறுமி - கன்னி' இரண்டிற்கும் இடைப்பட்ட பெண்கள்...

பட்டிக்காட்டிலிருந்து பட்டணம் நோக்கி
படிப்பு பெற பொதிமூட்டையாய்
புத்தகப் பையுடன் எதிர்பார்த்த பேருந்தை
எட்டி நோக்கிய வண்ணம் நிற்ற பள்ளி சிறார்கள்...

அடிக்கடி இருமலுக்கும்
அவதிப்படும் உடம்புக்கும்
வைத்தியம் பார்க்க
அரசு ஆஸ்பத்திரிக்கு போக முனைத்த வயோதிகர்கள்..

கம்புக்கு கட்டிய சேலையையும்
காமத்தோடு நோட்டம் விடுவதுபோல்
நிற்றிருந்த கழிசடைகள்....

காதலிக்கு ஏற்றவாறு
காதல் பாட்டு செல்போனில் 
ஒலிக்கவைக்கும் சில்லுவண்டுகள்...

இவர்களுடனான என் பயணம்
தொடர்கிறது தினந்தோறும்...

3 comments: