Tuesday 6 November 2012

மதம் செய்த மாயைதான் தாலி...



                        
"மூடத்தனத்தின் முடை நாற்றத்தின் சின்னம் தாலி"
"பெண்ணுரிமையை தட்டிப் பறிக்கும் சின்னம் தாலி"
"ஆணினத்தின் அடிமை என்பதை சுட்டிக் காட்டும் சின்னம் தாலி"
“பெருங்குற்றவாளிகளுக்கு கைவிலங்கு…
ஆனால் ஒரு குற்றமும் செய்யாத பெண்ணினத்திற்கோ
கழுத்தில் கட்டிய தாலி விலங்கு"


 "தாலி ஒரு வேலி", "தாலி ஒரு பாதுகாப்பு", "அந்நியன் ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பதற்கு ஒரு அரண்" என்று சொல்வதெல்லாம் பித்தலாட்டக்காரர்களின்  புலம்பல்கள். "ஆணின் அடிமை", "சம்பளமற்ற வேலைக்காரி" இவைகளை குறித்துக் காட்ட கட்டப்படும் அடிமை சின்னம்தான் தாலி.

இந்த அடிமை சின்னத்தை பெரிதும் போற்றக்கூடிய வகையில் இன்றும் நம் பெண்ணினம் வந்து கொண்டுதான் இருக்கிறது. சங்க இலக்கியங்களில் ஆணின் வீரத்தை காட்டி ஒரு பெண்ணை மணந்தான் என்றும், வீரத்தின் அறிகுறியாக விலங்குகளின் பற்கள், கொம்புகளை தங்க அணிகலன்களாக அணிந்து பெண்களை மணந்தார்கள் என்று நூல்களின் வாயிலாக அறிந்தோம். மேலும் சில சாதியினர் பொற்கொல்லர்கள் தன்னுடைய வேலைத்திறனை காட்டிப் பெண்ணை மணந்தார்கள் என்றும் தெரிய வருகிறது (மணமேடை அருகிலேயே தங்கத்தை உருக்கி தாலி அணிவித்ததாக). ஆனால் இந்தக் காலத்தில் கடையில் தங்கம் வாங்கி தாலியை அணிவிக்கிறார்கள். எப்படிப் புனிதமாகும்..?


பெண்ணுரிமை தட்டிப் பறிக்கும் சின்னம்தான் தாலி. பொதுவாக ஒரு பெண் பிறந்தவுடன் தகப்பனுக்கு அடிமை, தாலி அணிந்தவுடன் கணவனுக்கு அடிமை, கணவன் இறந்தபின் தாலி சின்னத்தை அறுத்து அவள் மகனுக்கு அடிமையாகிவிடுகிறாள். (மதம் செய்த மாயை தாலி)

            தாலியைப் பொறுத்தவரையில் சில பெண்களின் உள்ளத்தில் ஏற்றி வைத்த சொற்கள் "தாலியைக் கழற்றினால் கணவனின் உயிர்க்கு ஆபத்து", "விரைவில் குடும்ப பந்தம் முறிந்து விடும்" என்ற மூட கருத்துக்களை பெண்ணின் உள்ளத்தில் பதித்ததால் தாலியைப் புனிதமாகப் போற்றுகின்றனர். அதே நேரத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படும் மோதல்களின் போது பெண் தாலியை தூக்கி எறிவதும் பின்னால் மாற்றிக் கொள்வதையும் கண்கூடாக பார்க்கிறோம்.மேலும் தாலியைப் புனிதமாகக்  கருதும் பெண்ணினம் செய்யும் செயல்கள் போற்றத்தக்கதாக இல்லை. 

சுயமரியாதைக் கொள்கையுள்ள பெண்கள்  தாலி அணிவதில்லை. பெரியாரின் பேச்சுக்கள் அவளை உரிமை பெற வைத்து விட்டது. இவ்வையகத்தில் ஆணுக்குள்ள உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கு வேண்டும் என்று எங்களைப் போன்ற பெண்களை விழிப்படைய செய்து விட்டது. எங்கள் திருமணங்களில் தாலி இல்லை. மாலை இல்லை, அழகான தத்துவச் சொற்கள் உள்ளன. அதிலும் தாலிச் சின்னம் எப்படி உண்டாயிற்று என்பதையும் அறியும் போது, சிரிப்பாகவும் அவமானவாகவும் இருக்கிறது. எனவே இந்த தாலி என்னும் அடிமை சின்னத்தை ஒழிப்போமாக..


1 comment: