Showing posts with label பாட்டி. Show all posts
Showing posts with label பாட்டி. Show all posts

Monday, 10 September 2012

கோவிந்தம்மாள் பாட்டி


எங்கு பார்த்தாலும்
பசுமையான புல்வெளிகள்...
ஓங்கி உயர்ந்த மரங்கள்....
சலசலத்து ஓடும் ஆறுகள்...
மழையென கொட்டும் அருவிகள்...
இயற்கையின் வாசம் மட்டுமே
வீசிக் கொண்டிருக்கும்
ஆள் அரவமற்ற
அமைதிப் புயல் வீசிக்கொண்டிருந்த
எழில் மிகு கிராமத்தினிலே...
நாள் முழுதும் உழைத்த களைப்பில்
மெல்ல மெல்ல தளர் நடை போட்டு
பகலவன் உறங்கச்
சென்று கொண்டிருந்தது....

செங்கோல் ஏற்று
அரியாசனையில் அமர்ந்து
சந்திரன்
ஆட்சி புரிந்து
கொண்டிருந்த பொழுதிலே...
குடும்பத்தினர் அனைவரும்
வீட்டு வெளியில்
சந்திரனின் துணையில்
அமர்ந்திருக்க,
சூடான உணவு நடந்து
கொண்டிருந்த வேளையிலே...

பால் நிலாவின் முகம் காட்டி
தன் பேரப் பிஞ்சுகளுக்கு
உணவூட்டி
அதனூடே அவர்களுக்கே
உரித்தான பாணியில்
இரவுக் கதைகளை
இன்னிசையோடு
அரங்கேற்றிக்
காட்டிக் கொண்டிருந்தாள்
கோவிந்தம்மாள் பாட்டி...

கதைகளின் சுவாரசியத்தில்
தன்னை கட்டிப் பிடித்தவாறே
மெய் மறந்து
உறங்கி விட்ட
பேரக் குழந்தைகளை
அணைத்தவாறே
தானும் கண்ணயர்ந்தாள்...

அயர்ந்து போன சந்திரன்
உறங்கச் செல்லுகையில்
தன் துயில் நீக்கி
தாவி எழுந்தாள்
கோவிந்தம்மாள் பாட்டி
ஒரு வித இன்பத் துள்ளலோடு...

துள்ளி எழுந்த
மறுகணமே
துவண்டும் போனாள்...

வெளிநாட்டிற்கு
வாக்கப்பட்ட
தன் மகனின்
நிழல் நம்பி வந்து
ஏமாற்றமாய்,
நவீன வசதிகளோடு
மன நிம்மதியை
புதைத்துக் கொண்டிருந்த
ஓர் அறையில்
"என்றாவது ஓர் நாள்
தன் பேரப் பிள்ளைகளோடு
அழகிய கிராமத்திற்கு போய்
நிலா காட்டி
உணவூட்டுவதாய்"
எண்ணிய தன்
மனக் கனவினை நினைத்து...